இந்த விசுவாசம் உங்களுக்கு இருக்கிறதா? – ஜே.சி.ரைல். Have you got this faith? – J.C.Ryle.

Published September 29, 2021 by adming in Pastor's Blog

“விசுவாசத்தினாலே மோசே தான் பெரியவனானபோது பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்னப்படுவதை வெறுத்து, அநித்தியமான பாவசந்தோஷங்களை அநுபவிப்பதைப்பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அநுபவிப்பதையே தெரிந்துகொண்டு,   இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்து, எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான்.விசுவாசத்தினாலே அவன் அதரிசனமானவரைத் தரிசிக்கிறதுபோல உறுதியாயிருந்து, ராஜாவின் கோபத்துக்குப் பயப்படாமல் எகிப்தைவிட்டுப் போனான்.”

                         (எபிரெயர் 12:24-27)

       மோசே புறக்கணித்தது.

1. மோசே, பதவியையும், மேன்மையையும் விட்டு கொடுத்தான்.

2. மோசே, பாவ சந்தோஷங்களை புறக்கணித்தான்.

3. மோசே, எகிப்தின் பொக்கிஷங்களை புறக்கணித்தான்.

       மோசே ஏற்றுக்கொண்டது.

1. மோசே, உபத்திரவத்தையும், பாடுகளையும் ஏற்றுக்கொண்டான்.

2. மோசே, அசட்டை பண்ணப்பட்ட, தேவனுடைய ஜனங்களின் நட்பை ஏற்றுக்கொண்டான்.

3. மோசே, அவமானத்தையும், அவமதிப்பையும் ஏற்றுக்கொண்டான்.

 இவையெல்லாம் மோசேயால் எப்படி செய்ய முடிந்தது?

மோசேக்கு விசுவாசம் இருந்தது. அவனது அற்புதமான நடத்தைக்கு, விசுவாசம் முக்கிய ஆதாரமாக இருந்தது. விசுவாசம், அவன் செய்ததை செய்யவும், அவன் தேர்ந்தெடுத்ததைத் தேர்வு செய்யவும், அவன் மறுத்ததை மறுக்கவும் செய்தது. அவன் விசுவாசித்ததால், எல்லாவற்றையும் செய்தான்.

கடவுள் தனது சொந்த விருப்பத்தையும் நோக்கத்தையும் மோசேயின் கண்களுக்கு முன்பாக வைத்தார். இஸ்ரவேலின் வம்சத்திலிருந்து ஒரு மீட்பர் பிறப்பார் என்று கடவுள் மோசேக்கு வெளிப்படுத்தினார்- ஆபிரகாமின் பிள்ளைகளாகிய இஸ்ரவேல் மக்களிடத்தில், அந்த வாக்குத்தத்தம் இருந்தது என்றும், ஏற்ற நாளில் அதை நிறைவேற்றுவார் என்றும் விசுவாசித்தான் அவனது அற்புதமான வாழ்க்கையின் ஒவ்வொரு அடியும், வாழ்க்கை முழுவதும் அவனது பயணத்தின் ஒவ்வொரு நடவடிக்கையும், இந்த வாக்குத்தத்தத்தை அவன் முழுவதுமாக விசுவாசித்ததினால்தான், பார்வோனின் அரண்மனையில் இருந்த நன்மையை விட, தீமையையே காண முடிந்தது. தேவன் அவனோடு பேசினதினால், அவன் தேவனுடைய வார்த்தையை முழுமையாய் விசுவாசித்தான்.

அவன், தேவன் தம்முடைய வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுவார் என்று விசுவாசித்தான். அதாவது, அவர், என்ன சொன்னாரோ, அதை செய்வார் என்றும், அவர், என்ன உடன்படிக்கை செய்தாரோ, அதை நிச்சயம் நிறைவேற்றுவார் என்றும் விசுவாசித்தான்.

அவன், தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை என்று விசுவாசித்தான். இஸ்ரவேலுக்குண்டான விடுதலை, ஒரு கேள்விக்குறியானது என்று சூழ்நிலையும், மன உணர்வும் சொல்லிற்று. ஏனென்றால், தடைகளும், இக்கட்டுக்களும் பல இருந்தது. ஆனால், தேவன் போதுமானவர் என்றும், தேவன், தம் பணியை செய்ய ஆரம்பித்துவிட்டால், அவர், செய்து முடிப்பார் என்றும் விசுவாசம் மோசேயிடம் சொன்னது.

அவன். தேவன், சர்வ ஞானமுள்ளவர் என்று விசுவாசித்தான். சூழ்நிலையும் மன உணர்வும், அவனுடைய செயல் அபத்தமானது என்றும், கிடைத்த சந்தர்பத்தை, தூக்கிப்போடுகிறான் என்றும், பார்வோனுடைய மகளுடன் கொண்ட நட்பை முறிப்பதின் மூலம், தம்முடைய ஜனங்களுக்குண்டான நன்மையை பெற்றுக்கொடுப்பதை உதாசினப்படுத்துகிறான் என்றும் சொல்லிற்று. ஆனால், கடவுள் “இந்த வழியாக போ” என்று சொல்வாறென்றால் அது சிறந்ததாகவே இருக்கும் என்று விசுவாசம், மோசேயிடம் சொன்னது.

அவன் தேவன் சர்வ இரக்கமுள்ளவர் என்று விசுவாசித்தான். சூழ்நிலையும், மன உணர்வும், ஒருவேளை இலகுவான விடுதலை உண்டாகலாம் என்றும், சமரசம் செய்யப்படலாம் என்றும், அனேக சிரமங்கள் தவிர்க்கப்படலாம் என்றும் சொல்லிற்று. ஆனால், கடவுள் அன்பானவராயும், தேவையின்றி, தன்னுடைய மக்களுக்கு, ஒரு துளி கசப்பையும் அனுமதிக்க மாட்டார் என்றும் விசுவாசம், மோசேயிடம் சொன்னது.

விசுவாசம் மோசேக்கு ஒரு தொலைநோக்கி கருவியாய் இருந்தது. அது அவரை தூரத்திலுள்ள அமைதி, சமாதானம், இளைப்பாறுதல், வெற்றி போன்றவைகளை பார்க்க வைத்தது. அதே சமயத்தில், மங்கலான பார்வை (அவிசுவாசம்) சோதனையும், வெறுமையும், சஞ்சலத்தையும், நிம்மதியின்மையுமே பார்க்க வைத்தது.

மோசேக்கு விசுவாசம் ஒரு மொழிபெயர்ப்பாளராக இருந்தது. கடவுளினிடத்திலிருந்து வரும் கடுமையான எதிபார்ப்புக்களின் மொழிகளை, மொழிபெயர்த்து, வசதியான அர்த்தத்தை கொடுத்தது. அதேசமயம், அவிசுவாசமானது, முட்டாள்தனமான காரியத்தையும், குழப்பத்தையும் தவிர, வேறு எதையும் பார்க்க வைக்க முடியவில்லை.

விசுவாசம், மோசேயிடம், இவ்வுலகத்திற்குரிய மதிப்பும்,பட்டமும்,மரியாதையும்,புகழும் அனைத்தும் பூமிக்குரியது. அனைத்தும் வெறுமையானது, வீணானது, ஒன்றுமில்லாதது, நிலையில்லாதது என்றும். அதே சமயத்தில் நம் தேவனுக்கு பணியாற்றுவது போன்ற மகத்துவம் வேறு எங்கும் இல்லை. அவரே ராஜா. தேவனுடைய குடும்பத்தை சேர்ந்தவனே, உண்மையான பிரபு. ஆம், நரகத்தில் முதல் இடத்தில் இருப்பதை விட, பரலோகத்தில் கடைசியாக இருப்பது நல்லது என்றும் சொன்னது.

உலக இன்பமானது, பாவத்தின் இன்பங்கள் என்று விசுவாசம் மோசேயிடம் சொன்னது. ஆம், அவைகள் பாவத்துடன் கலந்ததது, பாவத்தன்மை கொண்டது, பாவத்திற்கு நடத்த கூடியது, ஆத்மாவிற்கு அழிவை கொடுக்க கூடியது, மேலும் கடவுளுக்கு பிரியமில்லாதது.  பாவ சந்தோஷங்களை அனுபவிப்பதை காட்டிலும், கடவுளுக்கு கீழ்படிந்து, பாடுபடுவதே மேல் என்றும் சொன்னது.

உலக இன்பங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மாத்திரமே என்றும், அவைகள் நிலையற்றதாயும், விரைவில் சோர்வடையச் செய்கிறதாயும். சில வருடங்களில் அனைத்தையும் விட்டு விட வேண்டும் என்றும் விசுவாசம் மோசேயிடம் சொன்னது

எகிப்தில் உள்ள பொக்கிஷங்களை விட, விசுவாசிக்கு பரலோகத்தில், மிகுந்த பலன் உண்டு என்று விசுவாசம் சொன்னது. அங்கு நிலையான செல்வங்கள் உண்டு என்றும், அங்கு துரு, கெடுக்க முடியாது, அல்லது திருடர்கள் உடைத்து, திருட முடியாது, அங்குள்ள கிரீடம் அழியாததாக இருக்கும், பரலோகத்தின் மேன்மை அதிகமாகவும், நித்தியமானதாகவும் காணப்படும் என்றும் விசுவாசம் சொன்னது. மேலும், அவனது விசுவாச கண்கள் எகிப்தின் பொக்கிஷங்களை தாண்டி, பரலோகத்தின் மேன்மையை பார்க்க வைத்தது.  

பாடுகள் மற்றும் உபத்திரவங்கள் உண்மையான தீமைக்குரியவைகள் அல்ல. அவைகள் கடவுளின் பள்ளி கூடம். அதில், அவர், கிருபையின் குழந்தைகளை மகிமைக்காக பயிற்றுவிக்கிறார். ஆம்,நம்முடைய அழுக்கடைந்த விருப்பங்களை சுத்திகரிக்க, மருந்துகள் அவசியமாயிருக்கிறது. நம்மிடத்தில் உள்ள கசடுகளை நீக்க, உபத்திரவத்தின் சூளை தேவைப்படுகிறது. உலகத்தை பிணைக்கும் உறவுகளை துண்டிக்கப்பட கத்தி தேவைபடுகிறது என்று விசுவாசம் மோசேயிடம் சொன்னது.

இந்த அடிமைத்தனத்திற்குள்ளாக பாடுபடும் இஸ்ரவேல் மக்கள், கடவுளுடைய பிள்ளைகள் என்று மோசேயிடம் விசுவாசம் சொன்னது. தத்தெடுப்பு, உடன்படிக்கை, வாக்குத்தத்தங்கள் மற்றும் மகிமை அவர்களுக்கு சொந்தமானது என்றும், தேவன் வாக்குத்தத்தம் பண்ணின ஸ்தீரியின் வித்து அவர்களிடமிருந்து  ஒரு நாளில் பிறக்கும் என்றும்  அவர் பிசாசின் தலையை நசுக்குவார் என்றும் அதினால் தேவனுடைய விசேஷமான ஆசீர்வாதங்களை பெற்றவர்கள் என்றும், தேவனுடைய பார்வையில் அவர்கள், அற்புதமானவர்களாய், அழகுள்ளவர்களாய் இருக்கிறார்கள் என்றும், துன்மார்க்கம் நிறைந்த அரண்மனையில் ஆட்சி செய்வதை விட, தேவனுடைய பிள்ளைகளின் மத்தியில் ஒரு வாயில் காவலராக இருப்பது நல்லது என்றும் விசுவாசம் சொன்னது.

மோசேயுடைய அனைத்துவிதமான நிந்தனையும், அவமதிப்பும் கிறிஸ்துவினுடையது என்றும், கிறிஸ்துவினிமித்தமாக, கேலி செய்யப்படுவதும், அவமதிக்கப்படுவதும் கவுரமானது என்றும், எவரெல்லாம் கிறிஸ்துவின் மக்களை துன்பபடுத்துகிறார்களோ, அவர்கள், கிறிஸ்துவை துன்பபடுத்துகிறவர்கள் என்றும், ஒரு நாள் உண்டு, அந்நாளில் அவரது எதிரிகள் அவர் முன் குனிந்து, மண்ணை கவ்வும் நாள் வரும் என்று மோசேயிடம் விசுவாசம் சொன்னது.

அவன்,  புகழ், மேன்மை, செல்வம், இன்பத்தை மறுத்ததில் ஆச்சரியமில்லை. அவன் வெகு முன்னோக்கி பார்த்தான். அவன் தன் விசுவாச கண்களால், ராஜ்யங்கள் தூசியாக சிதறுவதையும், செல்வங்கள் தங்களுக்கு இறக்கைகள் செய்து தப்பி ஓடுவதையும், இன்பங்கள், மரணத்திற்கும், நியாயத்தீர்ப்புக்கும் செல்வதையும், கிறிஸ்து மற்றும் அவரது சிறிய மந்தை மட்டுமே என்றென்றும் நிலைத்திருப்பதை கண்டான்.

மோசே, துன்பத்தையும், அடிமைத்தனத்தில் உள்ள மக்களையும், நிந்தையையும் தேர்ந்தெடுத்ததில் ஆச்சரியமில்லை. அவன் விசுவாசத்தின் கண்களால், பாடுகள் சிறிது காலம் மட்டுமே என்றும் அவமானங்கள் கடந்து,  பாடுகள் அனுபவித்த மக்களுக்கு, நித்திய கவுரவுத்துடன் முடிவடையும் நாள் உண்டு என்றும், அப்படியாக  புறக்கணிக்கப்பட்ட தேவனுடைய பிள்ளைகள், நித்திய நித்தியமாய் கிறிஸ்துவோடு மகிமையில் ராஜாக்களாய் ஆட்சி செய்வர் என்றும் கண்டான். 

இதை படிக்கும், எனக்கு அருமையானவர்களே! மோசே செய்தது சரியானது இல்லையா? இந்த நாளில் மோசே நம்முடன் பேசவில்லையா? பார்வோனின் மகளின் பெயர் அழிந்து விட்டது. பார்வோன் ஆட்சி செய்த நகரம் நமக்கு என்ன ஆச்சு என்று தெரியவில்லை. எகிப்தில் உள்ள பொக்கிஷங்கள் அழிந்துவிட்டன. ஆனால், எங்கெல்லாம், வேதம் போதிக்கப்படுகிறதோ, அங்கெல்லாம், மோசேயின் பெயர் அறியப்படுகிறது. மேலும் எவரெல்லாம் விசுவாசத்தினால் வாழ்கிறார்களோ, அவர்கள் பாக்கியவான்கள் என்று இது ஒரு நிலையான சாட்சியாய் இருக்கிறது.

இவ்வுலகத்திற்கு முன்னால், கடவுளை தேர்ந்தெடுப்பதற்கு விசுவாசத்தை தவிர வேறு எதுவும் உதவி செய்யாது.

ஒன்றும் உதவாது. உன்னுடைய அறிவோ, உன்னுடைய உணர்ச்சிகளோ, தொடர்ச்சியாய் செய்யும் வெளிப்புறமான செயல்களோ, அல்லது நல்ல நட்போ எதுவும் உதவி செய்யாது. அனைத்தும் சிறிது காலம் பலன் கொடுக்கலாம் ஆனால், முடிவில் வற்றி போய்விடும்.

பக்திக்குரிய வாழ்வின் அஸ்திபாரம் ஆணித்தரமாக,உறுதியாக நிற்பதற்கு, விசுவாசம் தவிர வேறு ஒன்றும் இல்லை.

இதை வாசிக்கும் வாசகரே! இந்த விசுவாசம் உங்களுக்கு இருக்கிறதா? அப்படியாக, இருக்குமென்றால் , எது உங்களுக்கு கவர்ச்சியாய் தோன்றுகிறதோ, அதை இழக்ககூடியவர்களாயும், நித்தியத்திற்குரிய லாபங்களை நம்பி, இன்றைய இழப்புக்களை குறித்து கவலையற்றவர்களாயும் இருப்பீர்கள். இக்கட்டான வேளையில் கூட, கிறிஸ்துவையே பின்பற்றி, அவரண்டை அண்டிக்கொண்டு, கடைசி வரையும் நிலைத்திருப்பீர்கள். அப்படிப்பட்ட விசுவாசம் உங்களுக்கு இல்லையென்றால், நான், உங்களுக்கு எச்சரித்து சொல்லுகிறேன், நீங்கள் பெற்றுக்கொள்ள தக்கதான, நல்ல விசுவாச ஓட்டத்தை ஓட முடியாதவர்களாய், நீங்கள் சீக்கிரம் சோர்ந்து போய், உலகத்தின் பின் போகிறவர்களாய் இருப்பீர்கள்.

தேவனுடைய வாக்குத்தத்தங்கள் உண்மையானவைகளும், சார்ந்துக்கொள்ள கூடியவைகளுமாய் இருக்கிறது என்ற ஆழமான விசுவாசம் இருக்க வேண்டும். வேதத்தில் சொல்லப்பட்ட அனைத்தும் உண்மையானதும், அதற்கு எதிரான அனைத்தும் பொய்யானது என்று ஆழமான விசுவாசம் இருக்க வேண்டும். நம்முடைய மாம்சமும், இரத்தமும் ஏற்றுக்கொள்ள கடினமாக இருப்பினும், கர்த்தருடைய வார்த்தை அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற ஆழமான விசுவாசம் இருக்க வேண்டும். அவருடைய வழி ஒன்றே சரியானது என்று ஆழமான விசுவாசம் கொண்டிருக்க வேண்டும். இல்லையேல், இந்த உலகத்திலிருந்து நீ ஒருபோதும் வெளியே வர முடியாது, சிலுவையை எடுத்துக்கொண்டு, கிறிஸ்துவை பின்பற்ற முடியாது.

நீ சம்பாதித்திருக்கிற சம்பாத்தியங்களை விட, கர்த்தர் கொடுத்திருக்கிற வாகுத்தத்தங்களை விசுவாசிக்க கற்றுக்கொள்ள வேண்டியது மேலானது. உன் கண்ணுக்கு எதிராக இருக்கும் உலக காரியங்களை விட, காணாத பரலோக பொக்கிஷங்களை விசுவாசிப்பது மேலானது. உலக மனுஷனுடைய பாராட்டை காட்டிலும், காணாத தேவனுடைய பாராட்டை பெறுவது மேலானது. அப்பொழுதுதான், நீயும் மோசேயை போல, இவ்வுலகத்தில், கடவுளுக்குரிய காரியத்தை முன் வைத்து செயல்படுவாய்.

இந்த விசுவாசத்தை கொண்டுதான், நமக்கு முன் வாழ்ந்த பரிசுத்தவான்கள், நற்பெயரை பெற்றனர். இவ்விசுவாசம் என்ற ஆயுதத்தை கொண்டுதான், இவ்வுலகத்தை ஜெயித்தனர்.

ஆம், இந்த விசுவாசம் மட்டும்தான், இவ்வுலகத்தின் ஏளனமான பார்வை, கேலி, கிண்டல்கள் மத்தியில், கர்த்தர் சொன்ன பெரிய பேழையை, நோவாவை கொண்டு, கட்ட வைத்தது. இந்த விசுவாசம் மட்டும்தான், ஆபிரகாம், லோத்திற்கு அவன் ஆசைப்படி விட்டுகொடுக்கவும், தன் கூடாரத்தில், சமாதானத்தோடு, வாழ செய்தது. இந்த விசுவாசம் மட்டும்தான், ரூத், தன்னுடைய எல்லா சொந்த,பந்தம், ஜாதி,ஜனம் அனைத்தையும் விட்டு, தன் மாமியை பற்றிக்கொள்ள உதவி செய்தது. இந்த விசுவாசம் மட்டும்தான், சிங்கம் ஆயத்தத்தோடு கெபியில் இருக்கிறது என்று அறிந்தும், தானியேல், தன் வழக்கப்படி, தொடர்ந்து ஜெபத்தில் தரித்திருக்க உதவிசெய்தது. இந்த விசுவாசம் மட்டும்தான், நெருப்பு சூளை, பன் மடங்கு அதிகரிக்கப்பட்டதை அறிந்திருந்தும், அந்த மூன்று குமாரர்கள், பொற்சிலையை வணங்குவதற்கு மறுக்க உதவி செய்தது. அவர்கள் விசுவாசித்ததினால் மட்டுமே, இவை அனைத்தும் சாதிக்க முடிந்தது. இதுவே அப்போஸ்தலனாகிய பேதுரு சொன்ன  “அருமையான விசுவாசம்” (2 பேதுரு 1:1)

இதை வாசிக்கும் எனக்கு அருமையானவர்களே!  நீங்கள் கர்த்தருடைய கிருபையிலும், கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவில்  வளருவீர்களா? உங்கள் வாழ்வில், மிகுந்த கனிகளை கொடுப்பீர்களா? நீங்கள் மிகவும் பயனுள்ளவர்களாக இருப்பீர்களா? மோசேயை போல, உலகத்தை தேர்ந்தெடுக்காமல், கடவுளை முதலாவது வைத்து தேர்ந்தேடுப்பீர்களா? நான் நிச்சயம் அறிவேன், ஒவ்வொரு விசுவாசியின் பதில் இதுவாகத்தான் இருக்கும். “ஆம்! ஆம்! ஆம்! இதுவே எங்கள் வாஞ்சையும், ஏக்கமாயும் இருக்கிறது.”

அப்படியென்றால், இந்த நாளில் நான் கொடுக்கும் ஆலோசனையை ஏற்றுக்கொள்ளுங்கள்: “ஆண்டவரே, எங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணும்” என்று அந்த சீடர்களை போல, கிறிஸ்து இயேசுவை நோக்கி சென்று கதறுங்கள். ஆம், உண்மையான கிறிஸ்தவனுடைய குணத்தின் வேர், விசுவாசமாய் இருக்கிறது. உங்களுடைய வேர் சரியானதாய் இருக்கட்டும். அப்பொழுது உங்களுடைய கனிகள் மிகுதியாய் காணப்படும். உங்களுடைய விசுவாச அளவின்படிதான், உங்களுடைய ஆவிக்குரிய செழுமை காணப்படும். எவன் விசுவாசிக்கிறானோ, அவன் இரட்சிக்கப்படுகிறது மாத்திரமல்ல, அவன் தாகமடையான், அவன் ஜெயங்கொள்ளுகிறவனாய் இருப்பான், இந்த உலகத்தின் தண்ணீர் மேல் நடந்து, பெரிதான காரியங்களை செய்கிறவனாய் இருப்பான்.

 “விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்.” (1 யோவான் 5:4).

This excerpt has been taken from “Faith’s Choice” by J.C.Ryle. From monergism.com

No Response to “இந்த விசுவாசம் உங்களுக்கு இருக்கிறதா? – ஜே.சி.ரைல். Have you got this faith? – J.C.Ryle.”

Leave a Comment