உபத்திரவத்தில் ஆறுதல் – தொமஸ் வாட்சன். A Consolation in Affliction – Thomas Watson.

Published January 27, 2022 by adming in Pastor's Blog

“கர்த்தாவே, உமது வசனத்தின்படி உமது அடியேனை நன்றாய் நடத்தினீர்.” (சங்கீதம் 119:65)

சங்கீதங்கள், வேதத்தின் முக்கிய அம்சமாய் இருக்கிறது. அவை நம்முடைய மகிழ்ச்சிக்காகவும் மற்றும் பிரயோஜனத்திற்காகவும் உள்ளன. ஆம், இவை, நம்மை திருப்திபடுத்த மாத்திரமல்ல, பெலப்படுத்தும்படியாகவும் உள்ளது. இந்த சங்கீதம் தெய்வீக மற்றும் ஆவிக்குரிய விஷயங்களால் நிறைந்திருப்பத்தை நாம் பார்க்கலாம்.  இவ்வசனத்தை நாம் இரண்டாக பிரிக்கலாம்.

1. தேவன் தாவீதுக்கு காண்பித்த இரக்கம்: அவர் அவனை நன்றாய் நடத்தினார்.

2. தாவீதின் நன்றியுள்ள அறிக்கை: “கர்த்தாவே, உமது அடியேனை நன்றாய் நடத்தினீர்”

தாவீதினிடத்தில், தேவன் காண்பித்த இரக்கத்தை கொண்டு, நாம் இங்கே கவனிக்க வேண்டியது:

உபதேசம் 1 தேவன் தம்முடைய மக்களை நன்றாய் நடத்துகிறவராய் இருக்கிறார். “தேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்.” (ஆதி 33:11).அனேக வேளைகளில், தேவனுடைய பிள்ளைகள், அவருடைய அன்புக்கு பாத்திரவான்களாய் நடந்து கொள்ளுகிறதில்லை. அப்படி அவர்கள் செயல்பட்டாலும், தேவன், அவர்களை நன்றாகவே நடத்துகிறவராய் இருக்கிறார்.

தேவன் தம் மக்களுடன் நன்றாக நடந்துகொள்வது அவரது இயல்பின் உள்ளார்ந்த நன்மையிலிருந்து வருகிறதாய் இருக்கிறது. “தேவன் அன்பாகவே இருக்கிறார்.” (1யோவான் 4:16).

கேள்வி: எந்த வழியில், தேவன் தம்முடைய மக்களை நன்றாக நடத்துகிறவராய் இருக்கிறார்?

பதில்: பல்வேறு இரக்கங்களைக் கொண்டு, அவர்களை வளப்படுத்துவதினால், “ உமது பாதைகள் நெய்யாய் பொழிகிறது.” (சங்கீதம் 65:11) ஆம், அவர், போஷிக்கிறார், வளர்க்கிறார், பராமரிக்கிறார்! இதை விட வேறு என்ன வேண்டும்? இது, அவர்களை நன்றாக நடத்தவில்லையா?

மறுப்பு: ஆனால், தேவன், தம்முடைய பிள்ளைகளின் வாழ்க்கையில், அவர் பாடுகள் உட்படுத்தும்போது, அவர், நன்றாக நடத்துகிறார், என்று எப்படி சொல்லமுடிகிறது? “நாள்தோறும் நான் வாதிக்கப்பட்டும், காலைதோறும் தண்டிக்கப்பட்டும் இருக்கிறேன்.” (சங்கீதம் 73:14). இவ்விதமாக, இவர்கள் வாதிக்கப்படும்போது, தேவன், நன்றாக நடத்துகிறார், என்று எவ்வாறு சொல்ல முடியும்?

பதில்: உண்மைதான், தேவன், தம்முடைய பிள்ளைகளை, கடுமையாக சிட்சிக்கும் பொழுது, அவர் நன்றாகவே நடத்துகிறவராய் இருக்கிறார்.  ஆம், அநேகநேரங்களில், நாம் மரியாளை போல், “இது எப்படியாகும்?” என்று கேட்கிறவர்களாய் இருக்கிறோம். இதைதான், நான் இங்கு விளக்கப்படுத்தி கூறுகிறேன்.

1. கர்த்தர், தம்முடைய பிள்ளைகளை பாடுகளுட்படுத்தினாலும், அவர்களை அவர் நன்றாகவே நடத்துகிறவராய் இருக்கிறார். ஏனென்றால், அவர் அவர்களுடைய தேவனாய் இருக்கிறார்.

தாவீது, துன்பத்தின் நடுவில் நடந்தாலும், “கர்த்தர் என் சுதந்திரம்” சங்கீதம் 16:5 என்று சொல்ல முடிந்தது. கர்த்தர், “மகா பெரிய பலனாய் இருக்கிறார்.” (ஆதி 15:1). அவரே, ஒட்டுமொத்த மகிழ்ச்சியின் பரலோகமாய் இருக்கிறார். அவரே, அனைத்து நன்மைகளும் அடங்கிய, நன்மையானவராய் இருக்கிறார். எவன்,  கடவுளை கொண்டிருக்கிறானோ, கடவுள் என்கிற பொக்கிஷத்தை கொண்டிருக்கிறான். ஆக, இப்படிப்பட்ட உன்னதமான பரிசை, ஒருவன் பெற்றிருக்கும்போது, அவனுடைய பிரச்சனைகளுக்கெல்லாம், அவர் போதுமானவராய் இருக்கிறார். அவரை விட, வேறு எதை அவர் கொடுக்க முடியும்?

2. கடுமையான உபத்திரவத்தை தேவப்பிள்ளைகள் சந்திக்கும்போது, கர்த்தர் அவர்களை நன்றாகவே நடத்துகிறவராய் இருக்கிறார். ஏனென்றால், அது அவர்களை நன்மைக்கேதுவாகவே நடத்துகிறதாய் இருக்கிறது. வசனமும் இவ்விதமாகத்தான் சொல்லுகிறது பாருங்கள், “உமது அடியேனை நன்றாய் நடத்தினீர்.” “நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது.”(சங்கீதம் 119:71). தாவீது இங்கே, நான் செழிப்பாய் இருந்தது, எனக்கு நல்லது என்று சொல்லவில்லை, மாறாக, நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது என்று சொல்லுகிறார். கர்த்தர், உபத்திரவத்தின் மூலம், இரண்டு விதமான நன்மைகளை செய்கிறார்:

a) உபத்திரவம் தேவப்பிள்ளைகளை ஞானமுள்ளவனாக்குகிறது. ஆம், உபத்திரவம் ஒரு ஞானப்பள்ளியாய் இருக்கிறது. உபத்திரவமானது, நம்பவே முடியாதபடி, அவர்களுடைய இருதயத்தில் குடிகொண்டிருக்கிற உலகம், பெருமை, அழித்துப்போடாத ஆசை இச்சைகளை வெளிப்படுத்தி காட்டுகிறது. உபத்திரவம் நம்முடைய பார்வையை குணமாக்குகிறது.

b) உபத்திரவம் பரிசுத்தத்தை வளர்க்கிறது. எவ்வளுக்கெவ்வளவு இரத்தினக்கல் செதுக்கப்படுகிறதோ அவ்வளவுக்களவு மின்னுகிறதாய் இருக்கும். “தம்முடைய பரிசுத்தத்திற்கு பங்குள்ளவர்களாகும்பொருட்டு”(எபி 12:10). செழிப்பு கிருபையை துருப்பிடிக்கச் செய்யும் போது – கர்த்தர் நம்மைத் துன்பத்தால் அடிக்கிறவராய் இருக்கிறார். தேவபிள்ளைகள் அவர்களுடைய பாடுகளுக்காக நன்றியுள்ளவர்களாய் இருக்கின்றனர். கர்த்தர், சிலுவையின் ஆரோக்கியமான ஒழுக்கத்தின் மூலம், அவர்களை மிகவும் தாழ்மையானவர்களாகவும், கிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பாகவும் மாற்றுகிறார்.

3. கர்த்தர், தம்முடைய பிள்ளைகளின் வாழ்வில் உபத்திரவங்கள் ஊடாய் கடந்து வர அனுமதித்தாலும், அவர், அவர்களை நன்றாகவே நடத்துகிறவராய் இருக்கிறார். ஏனென்றால், அவர்களுக்கென்று விசேஷித்த வாக்குத்தத்தத்தை அளிக்கிறவராய் இருக்கிறார். “மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்.” (1 கொரி 10:13).  நாம் எவ்வளவு பலமற்றவர்கள், அற்பமானவர்கள் என்று கர்த்தர் நம்முடைய உருவத்தை அறிந்திருக்கிறார். நம்முடைய மாம்சம் வெண்கலத்தினால் உண்டானது அல்ல. “என் மாம்சம் வெண்கலமோ?” (யோபு 6:12). ஒரு குழந்தையின் முதுகில், பலவானின் பாரத்தை வைப்பதற்கு, கர்த்தர் நம்முடைய திராணிக்கு மேலாக சோதிக்கிறவர் அல்ல. வீணையின் கம்பிகள் அறுந்துபோகிற அளவிற்கு, அவர் மீட்டுகிறவர் அல்ல. அவர் ஒரு கையை கொண்டு அடித்தாலும், மறு கையை கொண்டு அணைக்கிறவராய் இருக்கிறார். ஒன்று நம்முடைய நுகத்தை இலகுவாக்குவார். அல்லது நம்முடைய விசுவாசத்தை உறுதிபடுத்துவார்.

4. கர்த்தர் தம்முடைய பிள்ளைகளின் வாழ்வில், பாடுகளை அனுமதிக்கும் போது, அவர், அவர்களிடத்தில் நன்றாகவே நடத்துகிறவராய் இருக்கிறார். ஏனென்றால், உபத்திரவங்கள் தடுக்கும் காரணியாய் செயல்படுகிறது.

1.உபத்திரவம் பாவத்தை தடுக்கிறது. “அன்றியும், எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையினிமித்தம் நான் என்னை உயர்த்தாதபடிக்கு, என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது; என்னை நான் உயர்த்தாதபடிக்கு, அது என்னைக் குட்டும் சாத்தானுடைய தூதனாயிருக்கிறது.” (2 கொரி 12:7). செழிப்பு, ஒரு போதை வஸ்து போன்றது, மனிதர்களை பாவத்தில் தூங்க வைக்க கூடியது. கர்த்தர், தம்முடைய சிட்சை என்ற குரலால் அவர்களை எழுப்புகிறார், அதினால் அவர்களுடைய ஆவிக்குரிய சோம்பலைத் தடுக்கிறார்.

2. உபத்திரவம் நரகத்தை தடுக்கிறது. “நாம் நியாயந்தீர்க்கப்படும்போது உலகத்தோடே ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு, கர்த்தராலே சிட்சிக்கப்படுகிறோம்.” (1 கொரி 11:32). ஒரு நீதிபதி ஒரு கைதியின் மீது லேசான தண்டனையை விதித்து, அவனது உயிரைக் காப்பாற்றும் போது, ​​அவனுடன் நன்றாக நடந்துகொள்வதில்லையா? அவர் நம்மீது லேசான உபத்திரவத்தை வரவழைத்து, வரவிருக்கும் கோபத்திலிருந்து நம்மைக் காப்பாற்றும்போது, ​​அது கடவுளில் காணப்படும் நன்மையல்லவா? (2 கொரி 4:17). துன்மார்க்கன் அருந்த வேண்டிய ஆழமற்ற கோபக் கடலுடன் ஒப்பிடுகையில், தெய்வீகச் சுவையின் ஒரு துளி துயரம் ஒன்றுமில்லை!

5. கர்த்தர் சிட்சிக்கும் போது அவர் தனது மக்களுடன் நன்றாக நடந்துகொள்கிறார், ஏனென்றால் அவர் செய்வது அனைத்தும் தன்னுடைய அன்பினிமித்தமாகவே. உபத்திரவங்கள் கூர்மையான அம்புகள் போன்றது  – ஆனால் அவை அன்பான தகப்பனின் கைகளினால், எய்யப்படுகின்றன. தனக்கு வாரிசாக வராத ஒருவனை தகப்பன் தண்டிப்பதில்லை. தேவபக்தியுள்ளவர்களை கடவுள் தண்டிப்பது அன்பினால்தான். “நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்.” (வெளி 3:19). ஆண்டவருக்கு எதிரியின் தோற்றம் இருக்கும்போது – அவருக்கு ஒரு தகப்பனின் இருதயமும்  இருக்கிறது! ஈசாக்கைப் பலியிட ஆபிரகாம் தன் கையை உயர்த்தியபோது – அவன், அவனை நேசித்தான். அப்படியே, தேவன் தன் பிள்ளைகளின் வசதிகளை தியாகம் செய்யும்போது – அவர் அவர்களை நேசிக்கிறார். பிதாவாகிய கடவுள் கிறிஸ்துவுக்கு எதிராக கடுமையாக இருக்கவில்லையா?  “அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.” (மத். 3:17). அப்படியானால், தேவன் நமக்கு அன்பின் அடையாளங்களை மட்டுமே அனுப்பினால், அவர் நம்மை நன்றாக நடத்தி செல்கிறவராய் இருக்கிறார்.

6. உபத்திரவங்கள் மத்தியில், தேவன் தம்முடைய பிள்ளைகளை நன்றாகவே நடத்துகிறவராய் இருக்கிறார். ஏனென்றால், அவர், அவர்களை சிட்சித்தாலும், அவர்களை கைவிடுகிறதில்லை. “சீயோனோ: கர்த்தர் என்னைக் கைவிட்டார், ஆண்டவர் என்னை மறந்தார் என்று சொல்லுகிறாள்.” (ஏசாயா 49:14). “ஆண்டவர் என்றென்றைக்கும் கைவிடமாட்டார்.” (புலம்பல் 3:31). தேவன்  தமது பராமரிப்பின் செயல்களை மாற்றலாம்,  ஆனால், அவருடைய நோக்கத்தை அல்ல! அவர் தமது செயல்பாடுகளை மாற்றலாம் – ஆனால் அவரது மனநிலையை மாற்ற முடியாது. “எப்பிராயீமே, நான் உன்னை எப்படிக் கைவிடுவேன்?” (ஓசியா 11:8) இது தன் மகனுக்குரிய சுதந்திரத்தை பறிக்கப் போகும் ஒரு தந்தையைக் குறிக்கிறது – ஆனால் அவர், இச்செயலில் இறங்கும் போது, ​​அவரது இதயம் பாதிக்க தொடங்குகிறது: “நான் அவனுடைய தந்தை, அவன் ஒரு கலகக்கார மகனாக இருந்தாலும் – இன்னும் என்னுடைய மகனே, நான் எப்படி அவனை விட்டுவிடுவேன்?” தேவனுடைய இதயம் தம் பிள்ளைகள் மீது இப்படித்தான் செயல்படுகிறது – அவர் அவர்களைக் கடுமையாகக் கண்டித்தாலும் – அவர் தம்முடைய இரக்கத்தினால் அவர்களை கைவிடமாட்டார்!

7. தேவன் தம்முடைய பிள்ளைகளை உபத்திரவபடுத்தினாலும், அவர்களை அவர் நன்றாகவே நடத்துகிறவராய் இருக்கிறார். ஏனென்றால், அவர் அவர்களுக்கு தம் தெய்வீக பிரசன்னத்தை அளிக்கிறவராய் இருக்கிறார். “ஆபத்தில் நானே அவனோடிருந்து… (சங்கீதம் 91:15). பிரச்சனையில் இருந்து விடுபடுவதற்கான சாசனத்தை தேவன் ஒருபோதும் நமக்கு வாக்களிக்கவில்லை – ஆனால் பிரச்சனையில் நம்முடன் இருப்பதாக அவர் வாக்குறுதி அளித்துள்ளார். தேவனுடைய பிரசன்னம் இல்லாத, சிம்மாசனத்தில் உட்காருவதை காட்டிலும், அவருடைய பிரசன்னத்தோடு கூடிய, சிறையில் இருப்பது மேலானது. ஆம், தேவனுடைய பிரசன்னம், தைரியத்தை கொடுக்கிறதாய் இருக்கிறது. (அப் 23:11). கிறிஸ்துவானவர் மூன்று எபிரேய பிள்ளைகளுடன் இல்லையா? அவர் அவர்களுடன் நெருப்புக்குள் செல்லவில்லையா? “இதோ, நாலுபேர் விடுதலையாய் அக்கினியின் நடுவிலே உலாவுகிறதைக் காண்கிறேன்; அவர்களுக்கு ஒரு சேதமுமில்லை; நாலாம் ஆளின் சாயல் தேவபுத்திரனுக்கு ஒப்பாயிருக்கிறது என்றான்.” (தானியேல் 3:25). திரித்துவத்தில் இரண்டாவது நபராக இருப்பவர், நெருப்பு சூளையில் நான்காவது நபராக காணப்பட்டார்.

8. தேவன், தம்முடைய பிள்ளைகளைத் சிட்சிக்கும்போது, அவர்களுடன் நன்றாக நடந்துகொள்கிறார், ஏனெனில் இந்த துன்பங்கள் அல்லது கடுமையான சோதனைகள் நீண்ட காலம் நீடிக்காது.  மேகங்கள் கடந்த பிறகு, சூரியன் உதயமாகிறது. “இப்படி நான் இந்தக் காரியத்தினிமித்தம் தாவீதின் சந்ததியைச் சிறுமைப்படுத்துவேன்; ஆகிலும் எந்நாளும் அப்படியிராது..” (1 ராஜா 11:39). தேவன் எப்போதும் அன்பு செலுத்துகிறவர், அதேவேளையில், எப்போதும் உபத்திரவபடுத்துகிறதில்லை. உபத்திரவம் “ஒரு பாத்திரமாக” அழைக்கப்படுகிறது. (எசேக்கியல் 23:32). துன்மார்க்கன், கோபக்கடலை குடிக்கிறான். ஆனால், தேவபக்தியுள்ளவன், உபத்திரவம் என்ற பானத்தில், ஒரு வாய் மட்டும் பருகுகிறான். கர்த்தர்தாமே, கூடிய விரைவில் கூறுவார், “இந்த பாத்திரம் அவர்களை விட்டு நீங்ககடவது.” “சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம்.” (ஏசாயா 35:10). துன்பம், துன்புறுத்தப்படுவதற்கு, கொடுக்கு கொண்டிருந்தாலும், அத்துன்பம், சீக்கிரம் பறந்து போக, அது, இறக்கையும் கொண்டுள்ளது.

9. தேவன் தம்முடைய பிள்ளைகளுடைய பாடுகளின் வேளையில், அவர், அவர்களை நன்றாகவே நடத்துகிறவராய் இருக்கிறார். கர்த்தர், தேவ பிள்ளைகளின் சிட்சைக்கும், துன்மார்க்கனுடைய தண்டனைக்கும் உள்ள வித்தியாசத்தை வைத்திருக்கிறார். தேவபக்தியுள்ளவன், தன்னுடைய சுகவீனத்தில், வலியை, கொண்டிருக்கிறான். அதேவேளையில், துன்மார்க்கன், “அவன் தன் நாட்களிலெல்லாம் இருளிலே புசித்து, மிகவும் சலித்து, நோயும் துன்பமும் அடைகிறான்.” (பிரசங்கி 5:17). தேவன், தன பிள்ளைகளை நோக்கி, ஒரு அம்பு மட்டும் எய்கிறார். ஆனால், துன்மார்க்கன் மீதோ, அம்பு மழைகளை பெய்யப்பண்ணுகிறார். அவர், அவர்களை, அவர்களின் உடல், சொத்து, மனசாட்சி அனைத்தையும் தண்டிக்கிறவராய் இருக்கிறார். தேவபக்தியானவன், தன்னுடைய துன்பத்தில், கடவுளுடைய பரிதாபத்தை கொண்டிருக்கிறான். (ஏசாயா 63:9). அதேவேளையில், துன்மார்க்கன், அவனுடைய ஆபத்து வேளையில், தேவனுடைய பரிகாசத்தை கொண்டவனாய் இருக்கிறான். (நீதி 1:26). தேவபக்தியானவன், அவனுடைய பாடுகள் வேளையில், கிறிஸ்துவானவர், அவனுக்காக ஜெபிப்பதை கொண்டிருக்கிறான். அதே வேளையில், துன்மார்க்கனுடைய வாழ்விலோ, கிறிஸ்துவின் ஜெபத்திற்கு தூரமாய் இருக்கிறான். “உலகத்துக்காக வேண்டிக்கொள்ளாமல்..” (யோவான் 17:9).

10. தேவன் தம் பிள்ளைகளை சிலுவைப் பள்ளியில் சேர்க்கும்போது அவர்களுடன் நன்றாக நடந்துகொள்கிறார், ஏனென்றால் இந்த துன்பங்கள் அவர்களை பரலோகத்திற்கு தமது கையால் அழைத்துச் செல்கின்றன. ஆம், உபத்திரவங்களின் வழியாய், நாம் பரலோகத்திற்கு செல்கிறவர்களாய் இருக்கிறோம். “அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது.” (2 கொரி 4:17) துன்பத்தின் இருண்ட நிறத்தின் மீது - கர்த்தர், மகிமையின் தங்க நிறத்தை இடுகிறார்! ஓ அழுதுகொண்டிருக்கிற பரிசுத்தவானே! என்ன ஒரு ஆசீர்வாதமான மாற்றத்தை விரைவில் நீ பெறுகிறவனாய் இருக்கிறாய்! நீ உன் புனிதப் பயணத்தை - பரலோகமாக மாற்றுவாய். உன் விருப்பம் உனக்கு இருக்கும். செல்வங்கள் விரும்பத்தக்கதா? உனக்கு முத்து வாயில்கள் இருக்கும். கெளரவம் விரும்பத்தக்கதா? நீ வெள்ளை ஆடையை அணிந்து கொண்டிருப்பாய். இன்பம் விரும்பத்தக்கதா? நீ கர்த்தருடைய மகிழ்ச்சிக்குள் பிரவேசிப்பாய். 
 
ஓ, ஜீவ நதியில் இனிமையாக மூழ்கி, தேவனுடைய அன்பின் தேன் நீரோடைகளில் என்றென்றும் நீராடுவது எப்படி இருக்கும் என்று சிந்தித்துப்பார்! அஹா! என்னவிதமான அழகான காட்சியாய் இருக்கும் என்று சிந்தித்துப்பார்! பரலோகத்தின் பூக்களால் ஆன மாலையை அணிந்தால் எப்படி இருக்கும்! ஓ, ஒரு கிறிஸ்தவனின் எல்லா சோதனைகளுக்கும் இது என்ன ஒரு சரிகட்டுதலாக இருக்கும்! இந்தப் பேரின்பத்தைப் பார்த்தாலே அவனது துன்பங்களை மறக்கச் செய்யும்! மகிமையின் ஒரு சூரியக் கதிர் அவனது கண்ணீரின் தண்ணீரை வறண்டுவிட செய்யும்!
 
நடைமுறை படுத்த:
 
தேவன் நம்முடன் நன்றாக நடந்து கொண்டால் - முக்கியமாக அவர் நம்மைத் தண்டிக்கும்போது - தேவனைப் பற்றிய நல்ல எண்ணங்களைப் போற்றுவது பொருத்தமானது. நாம் துன்பத்தில் இருக்கையில், கர்த்தரை பற்றி கடுமையாக சிந்திக்க ஏதுவுண்டு - இது நமது பெருமையின் வெளிப்பாடாகும். அத்தகையவர்கள் மற்றவர்களை விட தங்களை சிறந்தவர்கள் என்றும், தேவனுடைய கைகளில் தாங்கள் சிறந்தவர்கள் என்றும் நினைக்கிறார்கள்; இந்த  முணுமுணுப்பு பெருமையை வெளிப்படுத்துகிறது! ஓ, நாம் தேவனைப் பற்றிய கடுமையான எண்ணங்களைக் கொண்டிருப்பதில் கவனம் செலுத்துவோம்! ஒரு மருத்துவர் தன் நோயாளிக்கு ஒரு கசப்பான மருந்தை பரிந்துரைக்கும் போது, ​​​​அந்த மருத்துவரைப் பற்றி தவறாக நினைக்க எந்த காரணமும் இல்லை - குணமாக்கும் பார்வையை கொண்டிருப்பது அவசியமாயிருக்கிறது! தேவனுடைய  பராமரிப்பின் கீழ் வரும் அனைத்து துயரங்கள், அவருடைய கரத்திலிருந்து வருகிறதே ஒழிய  - எதிரியின் காயங்கள் அல்ல! கடவுள் அடிக்கிறார் என்றால், - அவர் நம்மை காப்பாற்றுவதற்கே. கடுமையான துன்பத்திலிருந்து கடவுள் தம்முடைய மகிமையையும் நம் மகிழ்ச்சியையும் வடிகட்டுகிறவராய் இருக்கிறார்!
 
 நாம், தேவனை  நன்றாக நினைப்போம்!  எல்லா பாதகமான ஏற்பாடுகளிலும், நம் கர்த்தரை  ஆசீர்வதிக்க கற்றுக்கொள்வோம். "எல்லாவற்றிலும் ஸ்தோத்திரஞ் செய்யுங்கள்" (1 தெச. 5:18). எல்லாவற்றிலும் இருந்தால் - பின்னர் துன்பத்திலும்கூட. ஒரு நல்ல காரணதிற்காகவே,  தேவன் நம்முடன் நன்றாக நடந்துகொள்கிறவராய் இருக்கிறார். யோபு தனது கடுமையான துன்பத்தின் மத்தியிலும் தன் தேவனை ஆசீர்வதித்தான். (யோபு 1:21). யோபுவின் உடலில் அடிபட்டது, ஒரு இசைக்கருவியை மீட்டது போல் இருந்தது - ஆம், அவன் நன்றியுணர்வுடன் ஒலித்தான். விசுவாசிகள், தேவனுடைய ஆலயங்களாய் இருக்கிறார்கள். அவருடைய ஆலயங்களில் அல்லவா, அவரை துதிக்கும் சத்தம் கேட்க வேண்டும்.
 

No Response to “உபத்திரவத்தில் ஆறுதல் – தொமஸ் வாட்சன். A Consolation in Affliction – Thomas Watson.”

Leave a Comment